புதுடெல்லி: கல்வான் தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை 68,000 வீரர்களை ஏற்றி சென்றதாக ராணுவம், பாதுகாப்பு துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கில் கடந்த 2020ம் ஆண்டு சீனா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவத்தினரை உடனடியாக குவிக்க வேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. இது பற்றிய தகவல்களை ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த உயரதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். இது பற்றி அவர்கள் கூறுகையில், “அப்பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கவும் சீன படைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தொலை தூரத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களை கணிசமான அளவில் இந்திய விமானப்படை உடனடியாக நிறுத்தியது.
அப்போது இந்த படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட 9,000 டன் எடை கொண்ட பொருட்கள் விமானப்படையின் சி-130ஜெ சூப்பர் ஹெர்குலிஸ், சி-17 குளோப் மாஸ்டர் மூலம் மிக விரைவாக, குறுகிய நேரத்தில் கல்வான் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டன இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 68,000க்கும் மேற்பட்ட வீரர்கள், 90க்கும் மேற்பட்ட டாங்கிகள், பிஎம்பி எனப்படும் 330 போர் வாகனம், ராடார்கள், துப்பாக்கி மற்றும் இதர உபகரணங்களை விமானப்படையின் விமானங்கள் ஏற்றி சென்றன,’’ என்று தெரிவித்தனர்.