Thursday, May 23, 2024
Home » பொதுக்குழு நடந்தபோது அலுவலகத்தில் இருந்து எடுத்துச்சென்ற அதிமுக அலுவலக பொருட்கள், ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு: சைதை நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் பெற்றார்

பொதுக்குழு நடந்தபோது அலுவலகத்தில் இருந்து எடுத்துச்சென்ற அதிமுக அலுவலக பொருட்கள், ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு: சைதை நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் பெற்றார்

by Francis

சென்னை: அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடந்தபோது அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட தகராறின்போது ஓ.பி.எஸ்.தரப்பினர் எடுத்துச்சென்ற பொருட்கள் மற்றும் ஆவணங்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி.சிவி சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையை அடுத்த வானகரத்தில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி காலை எடப்பாடி தரப்பில் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது, பொதுக்குழு தீர்ப்பு வர சில நிமிடங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருதரப்பினரையும் விரட்டினர். அப்போது அங்கு வந்த தாசில்தார் கலவரத்தை தடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களையும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களையும் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி அதிமுக தலைமை அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தார்.

இது தொடர்பாக ஒ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு போலீசில் புகார் செய்தது. இதனிடையே அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் இந்த பொருட்களைக் கேட்டு சி.வி சண்முகம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் மனுதாரர் சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் அதிமுக அலுவலகத்திலிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எடப்பாடி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி.சண்முகம் அந்த பொருட்களை பெற்றுக்கொண்டார்.

You may also like

Leave a Comment

two − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi