சென்னை : தணிக்கை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை தயார் செய்யும் வகையில் ‘இலவச பயிற்சி மையங்கள்’ அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதன்படி, கல்வி துறை 412 பள்ளிகளை பயிற்சி மையங்களாகக் மாற்றியது. இதில் 27 மாவட்டக் கல்விப் பயிற்சி நிறுவனங்களும் அடங்கும். இத்திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் மொத்தம் 73,885 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் நடைபெற்ற ஜேஇஇ பயிற்சியில் பயின்ற மாணவர்களின் விவரங்கள் துறையால் பராமரிக்கப்படவில்லை. மேலும், ஜேஇஇ பயிற்சிக்கு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், ஒப்பந்த விதிகளை மீறி பயிற்சி அளிக்கும் நிறுவனத் தேர்வில் அதிமுக அரசு ஈடுபட்டது. அதாவது, அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வி அமைச்சர், துறையின் முதன்மை செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு பயிற்சி நிறுவனம், பவர் பாயின்ட் விளக்கக்காட்சியின் அடிப்படையில் மட்டுமே சேவை வழங்குநர் இறுதி செய்யப்பட்டார்.
மேலும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் நிதியிலிருந்துரூ.19.79 கோடி செலவில் 412 பயிற்சி மையங்களை அமைப்பதற்கான முன்மொழிவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கும் திட்டம் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அக்டோபரில் தமிழ்நாடு அரசு 412 மையங்களில் பயிற்சி நடத்த இறுதி செய்யப்பட்ட சேவை வழங்குனர் ‘சாய் ஸ்பீட் மருத்துவ நிறுவனம் பிரைவேட் லிமிடெட்’ உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தியது. 2017ல் 100 பயிற்சி மையங்களும், 2018ல் 312 பயிற்சி மையங்களும் தொடங்கப்பட்டது. 2018 டிசம்பரில் வகுப்புகளை ஒளிபரப்புவதற்கு மையப்படுத்தப்பட்ட ஸ்டூடியோவை நிறுவுவதற்கான வன்பொருள் வழங்குவதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 2019 மே மாதத்தில் சேவை வழங்குநர் வெளியேறியதால் மற்றும் கோவிட் பெருந்தொற்று காரணமாக திட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகள், அந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளை பயனற்றதாக மாற்றியது. மேலும், திட்டத்தின் நோக்கத்தை அடையாதது தவிர வன்பொருள் கொள்முதலில்ரூ.2.12 கோடி மற்றும் புத்தங்களை வாங்கியதால்ரூ.2.15 கோடி தவித்திருக்கக்கூடிய கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டது. அரசு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அரசுக்குரூ.2.15 கோடி தேவையில்லாத செலவு ஏற்பட்டது.