அவனியாபுரம்: அதிமுக எம்எல்ஏவின் காருக்கு பூட்டு போட்ட ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை செல்வதற்காக நேற்று வந்திருந்தார். அவரை வழியனுப்ப வந்த உசிலம்பட்டி ஏம்எல்ஏ ஐயப்பனின் காரை, பயணிகளை இறக்கிவிடும் இடத்தில் டிரைவர் நிறுத்தியிருந்தார். இதையடுத்து விதிமீறல் என கூறிய விமான நிலைய வாகன நிறுத்தத்தை கண்காணிக்கும் ஊழியர்கள், எம்எல்ஏ ஐயப்பனின் கார் சக்கரங்களை சங்கிலி கொண்டு பூட்டினர். இதையறிந்த டிரைவர், அங்கிருந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு அது எம்எல்ஏவின் கார் என்றும், தவறுதலாக நிறுத்தி விட்டதாகவும் விளக்கியதையடுத்து பூட்டு அகற்றப்பட்டது.