முசிறி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேல் கடந்த 17ம் தேதி மரணமடைந்தார். இந்தநிலையில் முசிறியில் உள்ள அவரது இல்லத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை சென்று பிரின்ஸ் தங்கவேல் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதிமுக ஆட்சி காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதன் மூலம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் பாலம் மழை வெள்ளம் காரணமாக இடிந்தது. அப்போதைய அதிமுக ஆட்சியில் புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனாலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக பாலம் திறப்பு விழா நடைபெறவில்லை,’என்றார். விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் அக்கட்சியின் வாக்கு சதவீதம் என கருதலாமா என்ற கேள்விக்கு, விஜயகாந்த் மறைவிற்கு மக்கள் வந்துள்ளனர். அதுகுறித்து விமர்சிக்க கூடாது என்று அவர் கூறினார்.