சென்னை: அதிமுகவைச் சேர்ந்த மாஜி எம்எல்ஏக்கள் 15 பேரை கட்சியில் சேர்த்ததால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுக்கு பதிலடி ெகாடுப்பது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக நிர்வாகிகளை இழுக்கவும் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதனால் அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் சேர்க்க பாஜக மேலிடம் தீவிரம் காட்டியது. ஆனால், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணியில் சேர மறுத்து வருகிறார்.
இதனால் அதிமுக கூடாரத்தை காலி செய்யும் வேலைகளை தொடங்க பாஜக மேலிடம் உத்தரவிட்டது. இதனால் வழக்குகளை காரணம் காட்டி முன்னாள் அமைச்சர்களுடன் பாஜக நிர்வாகிகள் ரகசிய பேச்சுவார்த்ைதயை தொடங்கினர். ஆனால் அதிமுக நிர்வாகிகளோ, தமிழகத்தில் பாஜகவுக்கு ஓட்டு வங்கி இல்லை என்பதால், நாங்களும் காணாமல் போய்விடுவோம் என்று கட்சி மாற மறுத்து விட்டனர்.
இதனால் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக அரசியலில் இல்லாமல் இருக்கும் தலைவர்களை தேடிப் பிடித்து கட்சியில் சேர்க்க திட்டமிட்டு ஆட்களை தேடிப்பிடித்தனர். அதில் 15 மாஜி எம்எல்ஏக்கள் சிக்கினர். அவர்களை அண்ணாமலை டெல்லி அழைத்துச் சென்று கட்சியில் சேர்த்தார்.
அதிமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர்கள் யாரும் கட்சியில் தீவிர உறுப்பினர்கள் இல்லை. ஆனாலும், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற வேலைகளை அண்ணாமலை செய்ததால் பதிலடி கொடுப்பது குறித்து, எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து நேற்றும், இன்றும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது பாஜகவில் ஒதுங்கியிருக்கும் அல்லது ஓரங்கட்டப்பட்டு இருக்கும் முக்கிய நிர்வாகிகளை இழுக்க உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கீழ்மட்ட நிர்வாகிகளை இழுத்து, பூத்துக்கு கூட ஆள் போட முடியாத அளவுக்கு நிலையை உருவாக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் பாஜக நிர்வாகிகளை இழுக்கும் வேலைகளை அதிமுக தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.