தருமபுரி: I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோட ஹள்ளியில் தி.மு.க. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருப்பதாக அறிவித்திருப்பது வெறும் நாடகம். தேர்தல் நேரத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக வந்துதான் ஓட்டுப் பிச்சை கேட்பார்கள். ஒருவர் திருடன் என்றால் ஒருவர் கொள்ளைக்காரர். இதுதான் இரண்டு கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும். நம்முடைய கூட்டம் கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். நமது முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். வாக்குறுதி அளித்தபடி ரூ.1000 கொடுத்தோம்… பிரதமர் வாக்குறுதி அளித்த ரூ.15 லட்சம் எங்கே? எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.