பெங்களூர் : கர்நாடக தேர்தலில் 2 தொகுதிகளில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.224 தொகுதிகளைக் கொண்ட, கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற அன்பரசனின் மனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவுடன் மனு தாக்கல் செய்த குமாரின் மனு அதிமுக வேட்பாளராகவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் மனு சுயேச்சையாகவும், ஏற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. உண்மையான அதிமுக தாங்கள் தான் என நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது. இரட்டை சிலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. தவறான புரிதலால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக் கொண்டுள்ளார். புலிகேசி நகர் தொகுதியில் மட்டும் தான் அதிமுக போட்டியிடுகிறது. வேறு எந்த தொகுதியிலும் அதிமுக போட்டியிடவில்லை.எனவே ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர்களை அதிமுக வேட்பாளராக கருதக்கூடாது.,” என்று தெரிவித்துள்ளது.