புதுக்கோட்டை: வருமானத்துக்கு அதிகமாக சி.விஜயபாஸ்கர் ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதிமுக ஆட்சி காலத்தில் 8 ஆண்டு காலமாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் இவர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்கா மஞ்சக்காரனை கிராமத்தில் உள்ள வேல்ஸ் என்ற தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முறைகேடாக தகுதி சான்றிதழை கடந்த 2020ஆம் ஆண்டு பலகோடி ரூபாய் பணத்தை பெற்று இவர் சான்றிதழ் வழங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி விழுப்புரத்தில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.23.85 லட்சம் ரொக்கம் 4.7 கிலோ தங்கம் 136 கனரக வாகனங்கள், சான்றிதழ், 19 ஆர்டிஸ்க் என பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அதிரடியாக கைப்பற்றினர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை குறித்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில்; 58 இடங்களில் நடந்த சோதனை, விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ரூ.45 கோடி சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணயில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கர் ரூ.36 கோடி சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் தனது பெயரிலும் மனைவி ரம்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பெயரிலும் ரூ.35.79 கோடி சொத்து குவித்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் அமலாக்கத்துறை, சிபிஐ, லஞ்சஒழிப்புத்துறை என பல்வேறு சோதனைகள் அதிமுக ஆட்சிக்காலத்திலேயே நடைபெற்று வந்தது. குறிப்பாக ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா, குட்கா வழக்கு என பல்வேறு வழக்குகளில் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.