நாகர்கோவில்: ‘அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம், பாரதிய ஜனதாவின் ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்பதை விட கொடுங்கோல் ஆட்சி முறை என்று சொல்ல வேண்டும்’ என்று சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்ைல. அவர் குணமடைய வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க இது போன்ற கைது சம்பவங்களை அதிகளவில் பாஜ செய்யும். இதுபோல் கொண்டு போய் நிறுத்துவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். இது ஜனநாயக நாடு, மக்களாட்சி கட்டமைப்பு கொண்ட நாடு. மக்கள் கையில் அதிகாரம் உள்ள நாடு என்று எண்ணி கொண்டு இருக்கிறோம். அதனால் தான் தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவைகள் தன்னாட்சி அமைப்பு என்று நினைக்கிறோம். ஆனால் தற்போது இவைகள் ஆட்சியாளர்களின் 5 விரல்களாக உள்ளன.
என்னை பிடிக்கவில்லை என்றால் என் வீட்டிற்கு தேசிய புலனாய்வு முகமை வரும். அந்த வகையில் தான் ேதசிய புலனாய்வு அமைப்பால் பலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட பலர் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இது சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. கொடுங்கோல் ஆட்சி முறை ஆகும். அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சொன்னால் இவ்வளவு காலம் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் அச்சுறுத்துவதற்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.
மோடி, அமித்ஷா சொல்வதை தான் அண்ணாமலை செய்வார். அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்திற்கு இப்போது கைது என்றால் அது நேர்மையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தவறு நடந்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எப்போதோ நடந்ததற்கு இப்போது கைது செய்வது எப்படி என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலைக்கு தகுதியில்லை
சீமான் கூறுகையில், ‘ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாரதிய ஜனதாவை சேர்ந்த அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? மகாராஷ்டிராவில் 40 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினீர்கள். அதற்கு பணம் எங்கிருந்து வந்தது? அது ஊழல் இல்லையா? ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் உள்ளது. இவர்கள் செய்யும் ஊழல் குறித்து யார் நடவடிக்கை எடுப்பது? அடுத்த ஆட்சி வந்தால் தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றார்.