ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்கினி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். உலக பிரசித்திபெற்றது ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில். இந்த திருக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஆடி அமாவாசையானது வருடத்திற்கு ஒரு முறை ஆடிமாதத்தில் வரும். இந்தாண்டு இரண்டு அமாவாசைகள் வந்துள்ளது. இதனிடையே இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும்மல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.
பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வழிபாடு நடத்திய பின் ராமேஸ்வரம் ராமநாதர்சாமி திருக்கோவில் உள்ள 22 புனித தீர்த்தங்களை நீண்ட வரிசையில் நின்று நீராடி வழிபாடு நடத்திவருகின்றனர். ராமேஸ்வரம் வருகை தந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும், யாத்திரை பணியாளர் சங்கம் சார்பாக பல்வேறு வகையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அக்நிதீர்த்தக்கடலில் பக்தர்களின் பொருட்களை திருடாத வகையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல கூட்ட நெரிசலை தடுக்க ஆங்காங்கே போலீசாரை அமர்த்தி உள்ளனர். கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் சிரமமின்றி நீராடுவதற்கு யாத்திரை பணியாளர்கள் சங்கம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் கோயிலில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதற்கு தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பிரச்சனை இல்லாமல் தரிசனம் செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதன் காரணமாக இந்த கோயிலில் தற்போது கூட்டம் குறைவாக இருந்தாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அருமையாக உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.