திருமலை : கடந்த 5 ஆண்டுகளாக எதுவுமே செய்யாமல் தேர்தல் நேரம் என்பதால் தற்போது எங்களை தேடிவருவதா? எனக்ேகட்டு எம்எல்ஏவை கிராம மக்கள் தொடர்ந்து விரட்டியடிக்கும் சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்து வருகிறது. சட்டசபைக்கான தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் அம்மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் மஹபூபாபாத் மாவட்டம் டோர்னக்கல் தொகுதி எம்எல்ஏ ரெட்டிநாயக் தனது ெதாகுதியில் உள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஆளுங்கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான இவரை, தொகுதியில் உள்ள பழங்குடியினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்து விரட்டி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இந்த நிலை நீடிக்கிறது.
தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ஏற்படுத்தி தருவதாக கூறி கடந்த தேர்தலில் அவர் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக எதுவுமே பழங்குடியினருக்கு செய்யவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதேபோல் நேற்று குறுவி மண்டல பகுதியில் சுற்றுப்பயணம் சென்ற எம்எல்ஏவை, பழங்குடியின மக்கள், `கோ-பேக் எம்எல்ஏ’ என பதாகை ஏந்தி கோஷம் எழுப்பினர். கடந்த 5 ஆண்டுகளாக எங்களுக்கு எதுவுமே செய்யாமல் தேர்தல் நேரம் என்பதால் எங்களை தேடிவருவதா? என கடும் வாக்குவாதம் செய்தனர். இதனைக்கண்ட போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கிராம மக்கள் திடீரென போலீசாரை தாக்க தொடங்கினர். இதனால் அச்சமடைந்த எம்எல்ஏ, உடனடியாக பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்.