ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. ஜப்பானில் இஷிகாவா மாகாணத்தின் கடற்கரை பகுதியை மையமாகக் கொண்டு ஜன.01 புத்தாண்டன்று மாலை 4 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 என பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் இஷிகாவா மட்டுமின்றி அதனை ஒட்டி உள்ள மற்ற மாகாணங்களும் கடுமையாக குலுங்கின. அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.பல பகுதிகளில் சாலைகள் பெயர்ந்து உடைந்தன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து 21 முறை நில அதிர்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் கடும் பீதி நிலவியது. மேலும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களில் ஜப்பானின் மேற்கு கடற்பகுதிகளை 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கின. பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
இவ்வாறு புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து பல்வேறு பேரிடர்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்களும், வீடுகளும் குலுங்கியதால் மக்கள் அலறியடைத்து வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.