ஆம்ஸ்டர்டாம்: விமானங்களில் வயது வந்தோர் மட்டும் பயணம் செய்யக்கூடிய வகையில் ஒரு பகுதியை கோரண்டன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஒதுக்க உள்ளது. விமானங்களில் பயணம் செய்யும்போது சிலர் குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே பயணிப்பார்கள். சிலர் தங்களின் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். குழந்தைகள் அழுகை சத்தமும் அவ்வப்போது கேட்கும். இதுபோன்ற சூழல், அமைதியாக பயணிக்க விரும்புவோருக்கு இடையூறாக இருக்கும். எனவே, குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக பயணிக்கும் நபர்களுக்கு, குழந்தைகளின் சத்தம் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க விமானங்களில் ‘‘வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற பகுதியை கோரண்டன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வழங்குகிறது.
ஆம்ஸ்டர்டாம் மற்றும் டச்சு கரீபியன் தீவான குராக்கோ இடையே இயக்கப்படும் விமானத்தில் வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. விமானத்தின் முன் பகுதியில் இந்த இருக்கைகள் ஒதுக்கப்படும். அடல்ட்ஸ் ஒன்லி இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.4,050 செலுத்த வேண்டும். அதிலும் பெரிய இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.8,926செலுத்த வேண்டும் என விமான நிறுவனம் கூறியுள்ளது.