சென்னை: 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் மாணவர் சேர்க்கை நடத்த நடைமுறைகள் தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவுரைகள்: 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் எல்கேஜி அல்லது முதல் வகுப்புக்கு அருகில் என்பது 1 கிமீ சுற்றளவில் பள்ளி இருக்க வேண்டும். ஏப்ரல் 10ல் பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் வெளியிடப்படும்.
rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் ஏப்ரல் 22 முதல் மே 20 வரை விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்(தனியார்), மாவட்ட கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம், ஆகிய அலுவலகங்களில் பதிவேற்றம் செய்யத் தேவையான ஸ்கேனர் வசதி, ஆகியவற்றை ஏப்ரல் 19 அன்றே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால், பெற்றோருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும். தனியார் சுயநிதி பள்ளி பிரதான நுழைவாயிலில் அறிவிப்பு பலகை அவசியம் வைக்க வேண்டும். பள்ளிகள் முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்படும் கட்டணம் குறித்து இஎம்ஐஎஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சேர்க்கையின் போது, குழந்தையின் பிறப்பு சான்றிதழை ஆய்வு செய்து பிறப்பு சான்று, மருத்துவமனைபதிவேடு, அங்கன்வாடி பதிவேடு, குழந்தையின் வயது குறித்து பெற்றோர் அல்லது காப்பாளரின் உறுதி மொழி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். எல்கேஜியில் சேர்க்க விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 முதல் 2021 ஜூலை 31க்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு 2018 ஆகஸ்ட் 1 முதல் 2019 ஜூலை 31க்குள் பிறந்திருக்க வேண்டும்.