Friday, May 17, 2024
Home » ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை அரசு திரும்ப பெற உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை அரசு திரும்ப பெற உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

by Karthik Yash

சென்னை: ஆதி திராவிடர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெற அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 1998ம் ஆண்டு ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த வீடுகள் இல்லாத 91 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கியது. கடந்த 1998ம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களில் இதுவரை ஒருவரும் வீடுகள் கட்டாததால், இலவச மனைகளை திரும்ப பெற்று அரசின் நல திட்டங்களுக்கு பயன்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி நாராயணசாமி கவுண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இலவசமாக கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை திரும்ப பெற உத்தரவிட முடியாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற காலியாக உள்ள மனைகளை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீடுகள் கட்டாமல் இருக்கலாம். அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச பட்டா வழங்கப்பட்டது. பட்டாவை திரும்ப பெற்றால் அரசின் நோக்கம் பாதிக்கப்படும். ஆதி திராவிடர்களுக்கு அரசு நிலம் ஒதுக்கியதால் மனுதாரர் பாதிக்கப்படவில்லை. எனவே, மனுதாரரின் கோரிக்ைகயை ஏற்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

You may also like

Leave a Comment

two + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi