சென்னை: சென்னையில் மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணத்தை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 61 சவரன் தங்க நகைகள், ரூ.1.08 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டியது அலுமினிய பாத்திரப் பட்டறையில் வேலை செய்தவர் என தெரியவந்துள்ளது. நகை, பணத்துக்காக மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. ஏற்கனவே மற்றோரு மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது என்றார்.
ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு:
சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி சிவகாமிசுந்தரி கடந்த 21ம் தேதி, அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த, வீட்டில் இருந்த, 45 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக, 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், மூதாட்டியை தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்தது கே.கே.நகர், பாரதிதாசன் காலனியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.
அவரை, நேற்று மதியம் அசோக் நகரில் போலீசார் கைது செய்தனர். வயதானவர்களை குறிவைத்து கொலை செய்து கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்தார். கொலையான 48 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.