புதுடெல்லி: அதானி குழுமம் மற்றும் ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து விசாரணை அறிக்கையை செபி ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் அதன் பங்கு விலையில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க்க நிறுவனம் குற்றம்சாட்டியது. இதனால் அதானி பங்குள் சரிந்தன. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்ஹா, மனோஜ்மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்தது. நேற்றும் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மே மாதம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. இதற்கு செபி முதற்கட்ட அறிக்கைதாக்கல் செய்தது. நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது செபி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ இன்னும் கொஞ்சம் அவகாசம் அளித்தால் முழுவிசாரணை அறிக்கையை நாங்கள் தாக்கல் செய்வோம்’ என்றார். அப்போது நீதிபதிகள்,“செபியின் விசாரணையின் நிலை என்ன?” என்று கேட்டனர்.
அப்போது ‘ கூடுதல் அவகாசம் வேண்டும்’ என்று துஷார் மேத்தா தெரிவித்தார். இதையடுத்து ஆகஸ்ட் 14ம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்த நீதிபதிகள் அதற்குள் செபி விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.