திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், இடுப்புலபாயாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகரின் நினைவிடத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 29 எஸ்சி, 7 எஸ்டி, 48 பிசி, 91 ஓசி பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அனகப்பள்ளி மக்களவை தொகுதியில் மட்டும் வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேட்பாளர்களில் புலிவேந்துலா தொகுதியில் ஜெகன்மோகன், நகரி தொகுதியில் நடிகையும் அமைச்சருமான ஆர்.கே.ரோஜா உள்ளிட்டோர் உள்ளனர்.
புதிதாக 50 பேருக்கு வாய்ப்பு: 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதிகள் என 200 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர்களில் 77 சதவீதம் பேர் இளங்கலை மற்றும் அதற்கு மேல் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்களில் 17 பேர் மருத்துவர்கள், 15 வழக்கறிஞர்கள், 34 இன்ஜினியர்கள், 5 ஆசிரியர்கள், 2 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், 1 முன்னாள் ராணுவ வீரர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்ளனர்.
மேலும் 200 தொகுதிகளில் 25 சதவீதம் பேர் அதாவது, 50 பேருக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டு முதல்முறையாக எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட உள்ளனர்.