Thursday, May 16, 2024
Home » நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

by Dhanush Kumar

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ரூ.15 கோடி வைப்புத்தொகையை செலுத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என லைகா வழக்கு தொடர்ந்துள்ளது. விஷால் பட நிறுவனத்திற்கு எதிரான லைக்காவின் பிரதான வழக்கில் ஜூன் 26ல் குற்றசாட்டுகள் பதிவானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். லைகாவுக்கு விஷால் நிறுவனம் தரவேண்டிய ரூ.21.29 கோடி கடனில் ரூ.15 கோடியை கட்ட கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ. 21.29 கோடி கடனை லைகா நிறுவனம் செலுத்தியது. விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் வங்கியில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் விஷால் ஆஜராகி, லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால்தான் பணத்தை செலுத்தவில்லை என்றும், தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை அடைக்கவே படங்களில் நடித்துவருவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும், மீண்டும் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் விஷால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, ரூ. 15 கோடியை வங்கியில் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு விசாரணைக்கு வரவிருந்தது, அதனால் இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என விஷால் தரப்பு கூறியது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

You may also like

Leave a Comment

3 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi