திருமலை: ‘குஷி’ திரைப்பட வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதனால் ரூ.1 கோடியை 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் என வழங்க உள்ளேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா-நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ‘குஷி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்று பேசியதாவது:
என்னையும், எனது திரைப்படத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக சில ஆயிரக்கணக்கான யூடியூபர்கள், தவறான ரிவ்யூ வழங்கி வருகின்றனர். அவை அனைத்தையும் தாண்டி குஷி திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி மூலம் நானும் குஷியாக இருப்பதோடு நீங்களும் குஷியாக இருக்கிறீர்கள். எனவே இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாக எனது வருமானத்தில் இருந்து ரூ.1 கோடியை 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளேன். இதற்காக எனது சமூக வலைதள பக்கத்தில் அதற்கான விண்ணப்பம் வைக்கப்படும். இந்த விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்களை தேர்வு செய்து இந்த தொகை வழங்கப்படும். இதன் மூலம் பள்ளி கட்டணம், வாடகை உள்ளிட்டவற்றை கட்ட இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.