கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரய்யா கலை கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட தனியார் நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டார். நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜவிற்கு எதிரானவர் என்பதை வெளிப்படையாக காட்டிக்கொள்பவர். பாஜவின் மதச்சார்பு அரசியலையும், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசையும் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார். பிரகாஷ் ராஜ் பாஜவிற்கு எதிரானவர் என்பதால், அதை எதிர்க்கும் விதமாக, கல்லூரி வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கல்லூரியை சேர்ந்த பாஜ மாணவர் அமைப்பு கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜவினரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த கல்லூரியை விட்டு கிளம்பிய பின்னர், அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அரங்குக்குள் வந்த பாஜக மாணவர் அமைப்பினர், அந்த அரங்கம் முழுவதையும் மாட்டு கோமியத்தை ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதேபோல், 2018ல் பிரகாஷ் ராஜ் ராகவேந்திரா மடத்திற்கு சென்றபோது, அவர் நின்ற அரங்கத்தை மாட்டு கோமியத்தால் சுத்தப்படுத்திய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.