மேட்டுப்பாளையம்: பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வெளியூரிலிருந்து வந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் (வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில்) குளிப்பவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்கள்’ என்று கூறியிருந்தார். இந்த செய்தியை மறுத்து கோவை எஸ்பி பத்ரி நாராயணன் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தவறான தகவலை பரப்பிய பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் செயலாளர் மஸ்தான் என்பவர் நேற்று புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ‘மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவானி ஆற்றில் குளிக்கும் போது திட்டமிட்டு கொலை செய்யப்படுவதாக கே.பாக்யராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பல்வேறு சோசியல் மீடியாக்களும் பகிர்ந்திருந்தன. இதனால், இந்த பொய்யான செய்தி தமிழகம் முழுவதும் சென்று விட்டது. ஆனால், திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் குறிப்பிட்டது போல இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக காவல்துறை இதுவரை வழக்கு பதிவு செய்ததில்லை. எனவே, இப்பகுதி மக்களிடையே மோதலை தூண்டும் வகையில் வதந்தியை பரப்பிய திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.