போர்ட் பிளேர்: அந்தமானில் மக்கள் வசிக்காத 800 தீவுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் டிஜிபி தெரிவித்தார். அந்தமான் யூனியன் பிரதேச போலீஸ் டிஜிபி தேவேஷ் சந்திர வத்சவா கூறியதாவது: அந்தமானில் தீவுகள் அதிகம் உள்ளன. இதில், 800 தீவுகளில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. இந்த தீவுகளுக்குள் யாரும் நுழைந்துவிடாமல் போலீசார் பாதுகாக்க வேண்டி உள்ளது. குறிப்பாக, கடத்தல்காரர்கள், சட்டவிரோதமாக குடியேறுவோர், தீவிரவாதிகள் அந்த தீவுகளுக்குள் வருவது தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2023ல் அந்தமானுக்குள் அத்துமீறி நுழைந்த 98 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மியான்மரை சேர்ந்தவர்கள். படகுகளில் ரோந்து செல்வது, கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.