Saturday, June 1, 2024
Home » இலவச வேட்டி, சேலை வழங்குவதில் தாமதமா?.. அமைச்சரின் கருத்தால் திமுக, அதிமுக கடும் மோதல்

இலவச வேட்டி, சேலை வழங்குவதில் தாமதமா?.. அமைச்சரின் கருத்தால் திமுக, அதிமுக கடும் மோதல்

by Neethimaan

சட்டப்பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திருப்பரங்குன்றம் ராஜன் செல்லப்பா (அதிமுக) பேசும்போது, தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பொங்கலுக்கான இலவச வேட்டி சேலை, வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கைத்தறித்துறை அமைச்சர் காந்தி: திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக தரமான வேட்டி, சேலை கொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கொடுக்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி சேலை குறித்து அதிமுக தவிர வேறு யார் கேள்வி கேட்டிருந்தாலும் சரியாக இருந்திருக்கும். (அமைச்சரின் இந்த பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர். சபாநாயகர் அப்பாவு அவர்களை அமைதிப்படுத்தினார்.) அவை முன்னவர் துரைமுருகன்: உங்கள் ஆட்சியில் நடந்ததை சொல்லும்போது அமைச்சரை பேச விடுங்கள்.

அமைச்சர் காந்தி: வேட்டி, சேலை தரத்தை சொல்லுங்கள். உண்மையான மனசாட்சியோடு, இதைப்பற்றி பேச வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: இலவச வேட்டி, சேலை தை மாதத்திற்குள் கொடுக்கவில்லை என்று எங்கள் உறுப்பினர் சொல்கிறார். எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் போகும்போது மக்கள் குற்றச்சாட்டாக சொல்கிறார்கள். அதை இங்கே பேசுகிறோம். அமைச்சர் வேலு: இன்னும் இலவச வேட்டி, சேலை வந்து சேரவில்லை என்று அதிமுக உறுப்பினர் பேசும்போது குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று துறை அமைச்சர் கூறினார். மற்றபடி தவறாக எந்த எண்ணத்திலும் அவர் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி: சட்டப்பேரவைக்கு மக்கள் பிரச்னை பற்றித்தான் பேச வந்திருக்கிறோம். அதிமுக கேள்வி கேட்கக் கூடாது என்கிறார். அப்போது நாங்கள் எல்லாம் வெட்டியாகவா வந்திருக்கிறோம்.

அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. மக்கள் குறைகளை இங்கே பேச அனுமதிக்க வேண்டும். (பூந்தமல்லி கிருஷ்ணசாமி (திமுக), எழுந்து பேச முயன்றார். ஆனால் அவருக்கு மைக் கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர் சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதற்கு பதிலடியாக பின்வரிசையில் இருந்த திமுக உறுப்பினர்களும் எடப்பாடிக்கு பதில் கூறினர். ஆனால் அவர்களை முன் வரிசையில் இருந்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் உட்காரும்படி கேட்டுக் கொண்டனர்.) சபாநாயகர் அப்பாவு உட்கார்ந்து கொண்டு யாரும் பேசக்கூடாது என்று எச்சரித்தார். அதன்பிறகு அவையில் அமைதி நிலவியது. தொடர்ந்து ராஜன்செல்லப்பா பேச அனுமதிக்கப்பட்டார். இந்த பிரச்னையால் சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே காரசார மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் அமைதிபடுத்தியதால் அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

20 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi