Saturday, July 27, 2024
Home » அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் 4.5 கிலோ தங்கம் பறிமுதல்: கடத்தல் ஆசாமி பற்றி விசாரணை

அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் 4.5 கிலோ தங்கம் பறிமுதல்: கடத்தல் ஆசாமி பற்றி விசாரணை

by MuthuKumar

சென்னை: தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அதை விமான கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, அபுதாபியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை வந்தது. அந்த விமானம் சர்வதேச விமானமாக வந்துவிட்டு, அதன் பின்பு உள்நாட்டு விமானமாக, சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்டுச் செல்ல வேண்டும். இதையடுத்து விமான ஊழியர்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த விமானத்தின் கழிவறையில் மின்சார வயர்கள் உள்ள கேபிள் பாக்ஸ் சற்று திறந்த நிலையில் இதை பார்த்த விமான ஊழியர்கள், இதுகுறித்து சென்னை விமான நிலைய மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, அந்த கேபிள் பாக்ஸ் பகுதிக்குள் கருப்பு டேப் சுற்றப்பட்ட ஒரு பார்சல் இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் இருப்பது கடத்தல் தங்கம் என்று தெரிய வந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சுங்க அதிகாரிகள் விரைந்து வந்து அந்த தங்க கட்டிகள் அடங்கிய பார்சலை பறிமுதல் செய்தனர். பார்சலை பிரித்துப் பார்த்து ஆய்வு செய்தபோது, அதனுள் சுமார் 4.5 கிலோ எடையுடைய தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி. தொடர்ந்து, சுங்க அதிகாரிகள், அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தங்க கட்டிகளை கடத்தி வந்த கடத்தல் ஆசாமி யார், இவர் தங்க கட்டிகளை விமான நிலைய கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, ஊழியர்கள் மூலமாக வெளியில் எடுத்து வர திட்டமிட்டாரா அல்லது விமானத்தில் கடத்தல் கும்பலை சேர்ந்த வேறு யாராவது ஒருவர், ஐதராபாத்துக்கு உள்நாட்டு பயணியாக பயணம் செய்து, ஐதராபாத் விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்தை வெளியில் எடுத்து செல்ல திட்டமிட்டு இருந்தாரா என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விமானத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி, வெளியில் வரும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆகியற்றை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.3 கோடி மதிப்புடைய 4.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

14 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi