கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் உள்ள ஏராளமான மக்கள் குறிப்பாக பழங்குடியினர்,தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களின் ஆதார் அட்டைகள் திடீரென முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஆதார் அட்டைகளை முடக்கம் செய்துள்ளதற்கான காரணங்கள் என்ன? இது பயனாளிகளின் சலுகைகளை பறிக்கவா அல்லது மக்களவை தேர்தலுக்கு முன்னர் மக்கள் இடையே பீதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையா? இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இதில், நேரடி விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் தனிநபர்களின் ஆதார் அட்டைகளை முடக்கம் செய்வதற்கான கடிதங்களை வழங்கி வருகிறது. ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் நடவடிக்கையால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மக்கள் இடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்களுடைய பிரச்னையை நிவர்த்தி செய்து தரும்படி மாவட்ட நிர்வாகத்தை அணுகி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
* மட்டுவா சமுதாயம் பாதிப்பு
முன்னதாக தலைமை செயலகத்தில் பேட்டியளித்த மம்தா பானர்ஜி,‘‘மக்களவை தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த அளவு ஆதார் அட்டைகள் செயலிழக்கப்பட வேண்டும். பெரும்பாலும் மட்டுவா சமுதாயத்தினரின் ஆதார் அட்டைகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளன. பழங்குடிகள்,சிறுபான்மையினருக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.