திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மணவூர் அடுத்த மருத வள்ளிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (38). கட்டிட மேஸ்திரியான இவர் நேற்று திருவள்ளூரில் நடைபெறும் கட்டுமான பணிக்காக காலை மணவூரிலிருந்து திருவள்ளூருக்கு செல்லும் மின்சார புறநகர் ரயிலில் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அரக்கோணத்தில் இருந்து வந்த ரயில் மணவூர் ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது. இதனால் அந்த ரயிலில் ஓடி வந்து ஏற முயன்ற ரகு தவறி கீழே விழுந்தார்.
இதில் இரண்டு கால்களும் துண்டாகி சிறிது தூரம் இழுத்துச் சென்று உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனையடுத்து ரயில்வே போலீசார் ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மணவூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.