மும்பை: மனைவியுடன் விவாகரத்து பெற்றதால் தனது மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், மகனின் பிறந்த நாளில் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் – மனைவி ஆயிஷா முகர்ஜி தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. ஆனாலும் இந்த ஜோடிக்கு 9 வயதில் மகன் உள்ளார். அவரை தாய் ஆயிஷா முகர்ஜி வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஷிகர் தவான், தனது மகன் ஜோராவரின் பிறந்த நாளையொட்டி தனது சமூக வலைதள பக்கத்தில், ‘நான் உன்னை (மகன்) கடைசியாக பார்த்து ஒரு வருடம் ஆகிறது.
கடந்த மூன்று மாதங்களாக உன்னை சந்திக்க முயற்சித்தேன். ஆனால் எல்லா இடங்களிலும் தடுக்கப்படுகிறேன். உனது பிறந்தநாளுக்கு என்னிடம் பகிர்வதற்கு பழைய புகைப்படம் ஒன்று தான் என் கையில் உள்ளது. உன்னை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், சமூக ஊடகங்களின் மூலம் தொடர்பு கொள்கிறேன். உன்னைப் பற்றி பெருமைப்படுகிறேன். நன்றாக நீ வருவாய். நன்றாக வளர்கிறீர்கள் என்பதை அறிவேன். உனது அப்பா, எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறார். உன்னை எப்போதும் நேசிப்பேன்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், தனது மகனுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.