தென்காசி: நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பென்சிகர். இவருக்கு தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள அடைச்சாணி என்ற கிராமத்தில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் இடம் உள்ளது. இங்கு தென்னை, மா, நெல், காட்டு மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பென்சிகரின் தோட்டத்தில் அவ்வப்போது இரவு நேரங்களில் ஒற்றை கரடி சுற்றிதிரிகிறது. மேலும் அங்குள்ள பிளாஸ்டிக் குழாய்கள், உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி, புற்றுகளில் இருந்து கரையானை தின்று சென்றுள்ளது. அதை தோட்டத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், இப்பகுதியின் அருகேயுள்ள பொத்தையில் சுமார் 10க்கும் மேற்பட்ட கரடிகள் உள்ளன. இவை அடிக்கடி சுற்றுவட்டார பகுதியிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. தற்போது வரை யாரையும் தாக்கவில்லை என்றாலும் அச்சமாக உள்ளது. வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.