மதுரை: மதுரை பறக்கும் பாலத்தில் அனுமதியின்றி வாகனப் பேரணியில் ஈடுபட்ட பாஜ கட்சியினரின் 100 வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மதுரை – நத்தம் சாலையில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அதன்பின்னர் பாஜ கட்சி நிர்வாகிகள் பறக்கும் பாலத்தில் வாகனப் பேரணி நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அனுமதி கோரி பாஜ சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதையும் மீறி பாஜ. நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் இரவு வாகனப் பேரணி சென்றனர். இதையடுத்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார், விதிமீறலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாஜ கட்சியினரின் வாகனங்களுக்கு தலா ரூ.1,500 அபராதம் விதித்தனர். இச்சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.