சேலத்தில் கோயில் பூசாரிகள் நலச்சங்க மாவட்ட மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட சங்கத்தின் மாநில தலைவர் வாசு நிருபர்களிடம் கூறியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆண்டுக்கு 2500 கோயில்களுக்கு திருப்பணி செய்ய தலா ரூ.2 லட்சம் அரசு வழங்கி வருகிறது. இந்த திருப்பணி நிதிக்கு ஒன்றிய அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்கிறது. ரூ.2 லட்சத்தில் ரூ.39 ஆயிரத்தை ஒன்றிய அரசு ஜிஎஸ்டி என்ற பெயரில் பிடித்துக் கொள்கிறது. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரியை பிடிப்பதால் திருப்பணி நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள ஆணையை வரவேற்கிறோம்.
கோயில் பூசாரிகள் அனைவருக்கும் விலையின்றி ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் அரசு வழங்கவேண்டும். கோயில்களில் ஆடிமாதம் கூழ் வார்க்க அரிசி, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும். கோயிலுக்கும், பூசாரிகளுக்கும் பல்வேறு உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 2 லட்சம் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 23 லட்சம் பேரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.