திருத்துறைப்பூண்டி,ஏப்.14: திருத்துறைப்பூண்டி பூமிநீலா தாயார் சமேத அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி திருத்தலத்தில் நித்ய கல்யாண திருக்கோலத்தில் பூமி நீலா தாயாருடன் அபிஷ்ட வரதராஜ பெருமாள் எழுந்தருளி மேற்கு திசை நோக்கி சேவை சாதிக்கின்றார். மேலும் இத்திருத்தலத்தில் மிகவும் விஷேசமாக 16 அடி உயரத்தில் விஸ்வரூபமாக அவதாரம் எடுத்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை தந்து வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.
பழமை வாய்ந்த கோயிலின் விமானம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம் கருடாழ்வார் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, திருமடப்பள்ளி நுழைவுவாயில் மொட்டை கோபுரம் ஆகியவைகளின் திருப்பணிகள் நடைபெற்றது. இதன் கும்பாபிஷேகம் 21ம் தேதி காலை மணி 9.15க்கு மேல் 10 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு நேற்று காலை பந்தககால் முகூர்த்த விழா சிறப்பு பூஜைகள் தீபாராதனைகளுடன் நடைபெற்றது. இதில் கோயில் தக்கார் ராஜேந்திர பிரசன்னா, செயல் அலுவலர் சிங்காரவடிவேலு, பிறவி மருந்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் முருகையன், கணக்கர் ஐயப்பன் மற்றும் கோயில் பணியாளர்கள், திருப்பணி உபயதாரர்கள், நகரவாசிகள் கலந்து கொண்டனர்.