சென்னை: கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆராமுதன். இவர் மீது மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. அதோடு அரிவாளால் வெட்டியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சாரணடைய வேண்டும். வேறொரு நீதிமன்றத்தில் சரணடைய முடியாது.
இந்த சம்பவத்தில் சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட், சரணடைந்ததை ஏற்றிருக்க கூடாது, அது போன்ற நடைமுறையை ஊக்குவித்திருக்க கூடாது. இதுபோல் சரணடைவதால் வழக்கு விசாரணை பாதிக்கும். உண்மையான குற்றவாளிகள் சரணடையாமல் போலியான நபர்களை சரணடைய வைப்பார்கள். எனவே, சத்தியமங்கலம் நீதிமன்றம் குற்றவாளிகள் சரணடைந்ததை ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அது தொடர்பான மனுவையும் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், இதுதொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.