டெல்லி : அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.அதே நேரம், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
இதனிடையே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது உருவாகி உள்ளது.தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக் 23ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.இந்த 2 காற்றழுத்தத் தாழ்வு பகுதிகளின் காரணமாக, துவக்க நிலையில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியபகுதிகளில் வலு குறைந்து காணப்படும் என்றும் அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொருத்தவரையில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.