வாஷிங்டன்: ஹவாய் காட்டு தீயில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் மவுயி தீவு அமைந்துள்ளது. இங்குள்ள காடுகளில் திடீரென தீ பிடித்தது. காற்று வேகமாக வீசி வருவதால் வனப்பகுதியில் தீ வேகமாக பரவியது. தீயை அணைக்கும் பணிகளில் கடலோர காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
லஹைனா பகுதியிலும் காட்டு தீ பரவியதால் வானுயர கரும்புகை எழுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர். உடனே அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவரகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டு தீயில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. இந்த காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என மவுயி தீவு மேயர் ரிச்சர்ட் பைசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதமாக நடந்த வருகிறது.