புவனகிரி: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்களை கையகப்படுத்தி இருந்தது. இந்த நிலங்களில் கடந்த 5 தினங்களாக பரவனாறு புதிய கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் என்எல்சி நிறுவனத்தின் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் வளையமாதேவி கிராமத்தில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்தார். ஆனால், போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி தரவில்லை.
இந்நிலையில் இன்று காலை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்திற்கு வந்த அருண்மொழித்தேவன் திடீரென தனது அலுவலகத்திற்கு உள்ளேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அலுவலகத்திற்கு உள்ளே உண்ணாவிரத பந்தல் அமைத்து அதில் கட்சி நிர்வாகிகள் சுமார் 30 பேருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், வளையமாதேவி கிராமத்தில் இன்று ஐந்தாவது நாளாக என்எல்சி சார்பில் கால்வாய் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.