சேலம்: வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில் தவறான தகவல்களை தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துள்ளதாக தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று (6ம் தேதி) விசாரணைக்கு வருகிறது. சேலம் நீதிமன்றத்தில் போலீசார், புகாருக்கான முகாந்திரம் இருக்கிறது என தெரிவித்துள்ள நிலையில் இதற்கான ஆவணங்களையும் போலீசார் தாக்கல் செய்வார்கள் எனவும், புகார்தாரரான மிலானியும் ஆஜராகி, வக்காலத்து தாக்கல் செய்வார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கால் வலி காரணமாக சேலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். இன்று வழக்கு விசாரணைக்கு வருவதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.