கடலூர்: கடலூர் அருகே திடீரென சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் சுமார் 50ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தமிழ்நாட்டில் மேற்குத்திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் அருகே மாலை 4 மணியளவில் நகர பகுதிகளில் லேசான காற்று வீசியது. கிராம பகுதியில் சுமார் அரைமணி நேரம் சூறாவளி காற்று வீசியது.
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எம்.புதூர், ராமாபுரம், சாத்தன்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த ஆண்டு 500 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றினால் முறிந்து விழுந்தது.
குலையுடன் இன்னும் இரண்டொரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.