திருச்சி, மே 24: திருச்சியில் தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி, இனாம்குளத்தூர் காவல்கார தெருவை சேர்ந்தவர் மணி (எ) வேலாயுதம் (55). அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோயில் பூசாரி. இவருக்கு சதீஷ் என்ற ஒரு மகனும், சுமதி, லெட்சுமி என்ற 2 மகள்களும் உள்ளனர். லெட்சுமி தனது குழந்தைகளுக்கு, புதன்கிழமை காலை (இன்று) வீரப்பூரில் காதணி விழா ஏற்பாடு செய்திருந்தார்.
இதையறிந்த சதீஷ், நேற்று தனது தந்தையிடம் சென்று லெட்சுமி வீட்டு காதணி விழாவுக்கு செல்லக்கூடாது என போதையில் வாக்குவாதம் செய்துள்ளார். அதை மணி கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் தனது தந்தை மணியை கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மணியை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த இனாம்குளத்தூர் போலீசார், சதீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.