முத்துப்பேட்டை, மே 23: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி செம்பியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த 14ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கி ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அன்னதானமும் நடைபெற்றது. முக்கிய திருவிழாவான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் ஏராளமானோர் விரதமிருந்து பால்குடம் காவடிகள் எடுத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து கஞ்சிவார்த்தல், மாவிளக்கு போடுதல், அபிஷேக ஆராதனையும், சந்தன காப்பு அலங்கரமும், வாணவேடிக்கையும் நடைபெற்றது. இரவு திரைப்பட நடன நிகழ்ச்சி மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள், கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.