தஞ்சை: தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் பாரில் சட்டவிரோதமாக மது குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் மது குடித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரும் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாரில் மது வாங்கி குடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே எதிரே உள்ள பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாகவும், பாரில் மது வாங்கி குடித்த விவேக் என்ற 36 வயது நபர் மற்றும் குப்புசாமி என்ற முதியவர் உயிரிழந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாரில் மதுபானம் குடித்த விவேக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாரில் சட்டவிரோதமாக புதுச்சேரி மதுபானம் விற்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
விசாரணைக்கு பிறகே முழுக்காரணம் தெரியவரும் என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் தெரிவித்துள்ளார். வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் தலைமையில் மதுபான மாதிரிகள் சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய சென்ற வட்டாட்சியர் சிறைபிடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் விஷச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது டாஸ்மார்க் மதுவை குடித்த இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.