கிருஷ்ணகிரி, மார்ச் 4: கிருஷண்கிரி மாவட்டத்தில் 959 மையங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், இன்று (நேற்று) நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் 879 முகாம்களும், நகராட்சி மற்றும் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் 80 முகாம்கள் என 959 முகாம்கள் அமைக்கப்பட்டது. இந்த முகாம்களில் 1,50,767 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பொது சுகாதாரத்துறை சார்பில், அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தகைள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 3,964 பணியாளர்கள், சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் டோல்கேட், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ரமேஷ்குமார், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் கலைவாணி, வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர்.சுஜித்ரா, டாக்டர்.இனியாள் மண்டோதரி, சமுதாய செவிலியர் சித்ரா, கிருஷ்ணகிரி நகர்மன்ற துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், முகமதுஜான், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பசுவராஜ், ரெட் கிராஸ் சொசைட்டி செந்தில்குமார், டேம்.வெங்கடேசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள்
பங்கேற்றனர்.