மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன சொகுசு டிரக்கில் 91 நாடுகளை சுற்றி வந்த ஜெர்மன் தம்பதியினர் நேற்று மாமல்லபுரம் வந்து புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தூர்பேன் (38). இவரது, மனைவி மிச்செய் எழுத்தாளர். இந்த, தம்பதியினர் தனது மகன் மற்றும் மகளுடன் கடந்த 12 ஆண்டாக அல்போனியா, இங்கிலாந்து, நார்வே, நியூசிலாந்து, குரோசியா, இஸ்ரேல், கிரீஸ்,ஜோர்டன், தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்து, தென் அரேபியா, துபாய், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்ரீலங்கா உள்ளிட்ட 91 நாடுகள் சுற்றி, தற்போது துபாயில் இருந்து கப்பலில் முப்பை வந்தனர். மேலும், நவீன சொகுசு வாகனத்துடன் ஜெர்மன் தம்பதியினர் அதன் மூலம், கர்நாடகா, கேரளா வழியாக நேற்று மாமல்லபுரம் வந்தனர். இதில், குளியல் அறை, கிச்சன், படுக்கையறை உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த, வாகனத்தை தூர்பேன் ஓட்டுகிறார். இவர்கள், ஓட்டலில் சாப்பிடுவதில்லை. அவரது, மனைவி மிச்செய் அந்த வாகனத்திலேயே சமையல் செய்கிறார். முன்னதாக, உலக புகழ் வாய்ந்த சுற்றுலா நகரமான மாமல்லபுரம் வந்த இவர்கள் கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகே சொகுசு வாகனத்தை நிறுத்திவிட்டு கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது, அங்கு வந்த சில உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சொகுசு டிரக்கை ஆச்சரியத்துடன் பார்த்து, அதன் முன் நின்று சிரித்த முகத்துன் புகைப்படம் எடுத்து சென்றனர். ஒரு, சொகுசு வீடுபோல் வசதி கொண்டவேனில் அடுத்து சென்னை வழியாக ஒரிசா, கொல்கத்தா, குஜராத் செல்ல விருப்பதாகவும், ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும்போது கையில் பணம் குறைவாக இருந்தால் ஜெர்மன் சென்று சம்பாதித்து மீண்டும் தங்கள் பயணத்தை தொடங்குவோம் என மென்பொருள் இன்ஜினியர் தூர்பேன் கூறினார். …