தென்காசி: வாசுதேவநல்லூரில் தொழிலதிபர் வீட்டில் 90 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் எஸ்.டி.நகர் புதுமனை 3ம் தெருவில் வசிப்பவர் மணிவண்ணன். இவர் வாசுதேவநல்லூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி அதிகாலை மணிவண்ணன் மற்றும் குடும்பத்தினர் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் நேற்றிரவு 10 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டு காம்பவுண்ட் கேட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டு பீரோ திறந்து கிடந்தது.
அதில் வைத்திருந்த 90 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரொக்கம் ரூ.5 லட்சம் ஆகியவற்றை காணவில்லை. மணிவண்ணன் மற்றும் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. பணத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 65 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து தொழிலதிபர் மணிவண்ணன், வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.