தூத்துக்குடி: தூத்துக்குடியில் காரில் 1.400 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 9 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், டவுன் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக் குமார் தலைமையிலான போலீசார், கதிர்வேல் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரை ஓட்டி வந்தவர் தூத்துக்குடி கதிர்வேல்நகர், வேலவன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பதும், காரில் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிப்காட் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா, கார், ரூ.10,260 ரொக்க பணம் மற்றும் 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.