வேலூர், டிச.13: தமிழகத்தில் கிராமப்புற 9ம் வகுப்பு மாணவர்கள் ஊரக திறனாய்வு தேர்வு வரும் 16ம் தேதி நடக்க உள்ளதால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னையை தவிர்த்து, கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தேர்வெழுத 9ம் வகுப்பு மாணவர்கள் தகுதி பெற்றவர்களாவர். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ₹1000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி 9ம் மாணவர்கள் இந்த தேர்வு எழுதலாம். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கிடையே நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 16ம்தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அரசு தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை நேற்று பிற்பகல் முதல் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு தேர்வுத்துறை சார்பில் ஊரக பகுதி மாணவர்களுக்காக ஊரக திறனாய்வுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2023-2024) ஊரக திறனாய்வுத்தேர்வு டிசம்பர் 16ம்தேதி நடத்தப்பட உள்ளது. ஊரக பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதியுடையவர் ஆவர். நகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக விண்ணப்பித்து இருந்தனர். இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர்ப் பட்டியலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இணையதளம் மூலம் தங்கள் பள்ளியின் ஐடியை கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள கொள்ளலாம். மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வேண்டும். தேர்வர்களின் தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளில் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பி சிவப்பு நிற மையினால் பிழையினைச் சுழித்து சரியான திருத்தத்தினைக் குறிப்பிட்டு அப்பள்ளித் தலைமையாசிரியர் சான்றொப்பம் மற்றும் முத்திரையிட்டு அத்தேர்வர்களை தேர்வெழுத அனுமதித்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.