* சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவு
திருமலை: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 8ம் நாளான நேற்று தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி எழுந்துருளி வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 15ம் தேதி நவராத்திரி பிரமோற்சவம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 8ம் நாளான நேற்று காலை 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி தேவி பூதேவி தயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் மட்டும் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். பிரமோற்சவத்தின் கடைசி வாகன சேவையான நேற்றிரவு கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது எழுந்தருளி மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், பிரமோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை மலையப்ப சுவாமி தயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மேலும், வராக சுவாமி சன்னதி முன்பு ஏழுமலையான் கோயில் தெப்பகுளம் அருகே சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தப்பட உள்ளது. அப்போது பக்தர்கள் புனித நீராட உள்ளனர். அத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.
* ஜனவரியில் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் வெளியீடு
திருப்பதி எழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி மாதம் ஏழுமலையாைன தரிசிக்க இன்று ஆன்லைனில் டிக்கெட் ளெியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் இன்று காலை 10 மணிக்கும், வாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி வி.ஐ.பி. தரிசனம், அறைகள் பதிவு செய்ய இன்று காலை 11 மணிக்கும, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் இன்று மாலை 3 மணிக்கும் வெளியிடப்படுகிறது. மேலும், நாளை காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகள் முன்பதிவு 25ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. எனவே பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை, சேவையில் பங்கேற்க முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.