Friday, May 17, 2024
Home » நாளை 8வது முறையாக பிரசாரத்திற்கு வருகை தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யாமல் இப்போது அடிக்கடி செல்வது ஏன்?

நாளை 8வது முறையாக பிரசாரத்திற்கு வருகை தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யாமல் இப்போது அடிக்கடி செல்வது ஏன்?

by Karthik Yash

* 2015ல் அறிவித்த மதுரை எய்ம்ஸ் எங்கே?
* 10 ஆண்டில் நிறுவிய கல்வி நிறுவனங்கள் எங்கே?
* சேலம் உருக்காலையை விற்க வேகம் காட்டியது ஏன்?
* பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

புதுடெல்லி: இந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டு, இப்போது ஓட்டுக்காக அடிக்கடி தமிழ்நாடு செல்வது ஏன் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதுவரை 7 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பிரசாரத்திற்கு வந்துவிட்டார். 8வது முறையாக நாளை நெல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை புறக்கணித்துவிட்டு, இப்போது ஓட்டுக்காக மட்டும் அடிக்கடி அங்கு செல்வது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டிற்கு செல்லும் பிரதமரிடம் இன்று கேட்கப்படும் கேள்விகள்:
1. எய்ம்ஸ் மதுரை: பிரீமியர் இன்ஸ்டிட்யூட்டா அல்லது விளம்பர ஸ்டண்ட்டா?
2. பாஜ ஏன் தமிழ்நாட்டில் ஒரு முதன்மை கல்வி நிறுவனத்தை கூட அமைக்கவில்லை?
3. சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க பிரதமர் ஏன் அவ்வளவு ஆர்வம் காட்டினார்?

மோடியின் வெற்று அறிவிப்பு விவரங்கள் பின்வருமாறு:
1. 2015-16 ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதாக பாஜ மிகவும் பெருமையுடன் அறிவித்தது. இந்த அறிவிப்பு முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் 2019 தேர்தலுக்கு முன்பு, பிரதமர் மோடி இறுதியாக மிகவும் பிரமாண்டமாக விளம்பரம் செய்து மதுரைக்கு சென்று எய்ம்ஸ் அடிக்கல் நாட்டினார். இப்போது மேலும் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன, மீண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது மீண்டும் தேர்தல் வருவதால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மருத்துவமனை மற்றும் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் இறுதியாகத் தொடங்கியுள்ளன. பிரதமர் விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி தற்காலிக வளாகத்தில் செயல்பட்டுவருகிறார்கள். ஐந்து மாணவர்கள் ஒரு அறையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். புறநோயாளிகள் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை அரங்குகளுக்குச் செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் நூலகங்களில் முதல் ஆண்டு மாணவர்களுக்கான புத்தகங்கள் மட்டுமே உள்ளன. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்குக் அளித்த முதன்மையான மருத்துவ நிறுவனம் இதுதானா? மதுரையில் உண்மையிலேயே எய்ம்ஸ் கட்டி முடிக்க எத்தனை தேர்தல்கள் ஆகும்?
2. பாஜ ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரு முதன்மையான கல்வி நிறுவனம் கூட கட்டப்படவில்லை. ஐஐடி மெட்ராஸ், என்ஐடி திருச்சிராப்பள்ளி, ஐஐஎம் திருச்சிராப்பள்ளி மற்றும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து முதன்மை கல்வி நிறுவனங்களும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டன. தமிழ்நாடு மாணவர்களுக்கு பிரச்சனைகளை தவிர வேறு எதையும் உங்கள் அரசு உருவாக்கியுள்ளதா?
3. 2019ல், சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இந்த சிறப்பு எஃகு அலகு தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து, கிட்டத்தட்ட 2000 பேர் கொண்ட ஒரு மாபெரும் பேரணி அங்கு நடந்தது. இந்த பேரணியில் தொழிலாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆலை அமைப்பதற்காக தங்கள் நிலத்தை தியாகம் செய்த விவசாயிகள் பலர் இருந்தனர். இந்த ஆலை கிட்டத்தட்ட 25 கிராமங்களை உள்ளடக்கியது, அதில் 18 அல்லது 19 கிராமங்கள் ஆலை கட்டப்பட்டதிலிருந்து மறைந்துவிட்டன. ஆலை வேண்டுமென்றே தவறாக நிர்வகிக்கப்படுவதாகவும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டின் தலைமை ஒன்றிய ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். மீண்டும், பா.ஜ. தனது முதலாளித்துவக் கூட்டாளிகளின் நலன்களுக்காக உழைக்கும் மனிதனின் வாழ்வாதாரத்தை அடகு வைத்துள்ளது. போராட்டக்காரர்களால் இதுவரை ஆலையை விற்க ஒன்றிய அரசால் முடியவில்லை. ஆனால் இந்த ஆலையை அகற்ற பாஜ ஏன் அவ்வளவு துடித்தது என்ற கேள்வி இன்னும் உள்ளது. இவ்வாறுஅவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

பே பிஎம்
ஜெய்ராம்ரமேஷ் கூறுகையில்,’ 2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளுக்கு பா.ஜ. இப்போது நான்கு வடிவங்கள் கொடுத்து தனித்து நிற்கின்றன:
1. பே பிஎம்: தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழலை சட்டப்பூர்வமாக்குதல்
2. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது அற்பமான ஈடி, சிபிஐ வழக்குகளை கட்டவிழ்த்துவிட்டு ஊழலுக்கு எதிரான முயற்சிகளை அரசியலாக்குவது
3. பா.ஜ வாஷிங் மெஷின் மூலம் பிரதமருடன் இணையும் அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை தாமதப்படுத்துதல் அல்லது நிவாரணம் வழங்குதல்
4. ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள்
இதே போல் ஊழலை சட்டப்பூர்வமாக்கி, சாதாரணமாக்கியதை பிரதமர் மோடியை விட யாரும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* பா.ஜ வாஷிங் மெஷினில் கடைசியாக சுத்தமானவர்
ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ பிஜூ ஜனதா தளம் கட்சியின் நிறுவன உறுப்பினரும், வாஜ்பாய் அரசில் நிலக்கரித்துறை அமைச்சருமான திலிப் ரே, 1999ம் ஆண்டு ஜார்க்கண்டில் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், 2020ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அவரது தண்டனைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் ரூர்கேலாவிலிருந்து பாஜ சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகின்றன. ஊழலுக்கு எதிரான மோடியின் நடவடிக்கை இப்படித்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

fifteen + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi