சிவகங்கை, செப்.27: மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தனபால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கையில் மண் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் மண் மாதிரிகள், நீர் மாதிரிகள் கொடுத்து ஆய்வறிக்கை பெற்று அதனடிப்படையில் உரங்கள் இட்டும், பயிர் சுழற்சி மேற்கொண்டும் பயனடையலாம். விவசாயிகள் இப்பணிக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மண் ஆய்வில் மண்ணின் தன்மை, உப்பின் நிலை, களர் அமில நிலை, அங்கக கரிமம், சுண்ணாம்புத் தன்மை ஆகிய வேதியியல் குணங்கள், தழை, மணி, சாம்பல், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட சத்துக்களின் விபரம் தெரிவிக்கப்படும்.
இந்த ஆண்டில் மாவட்டத்தில் உள்ள 89 ஊராட்சிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் 100மண் மாதிரிகள் சேகரித்து உரிய விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகள் மண் வள அட்டையை பெறலாம். மேலும் தமிழ் மண் வளம் இணையத்தளம் மூலம் மண் சத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.